Address: | பி. நீலகண்டன் (9094041193) நாடியம் அஞ்சல் 614802 பேராவூரணி வட்டம். தஞ்சாவூர் மாவட்டம் |
வணக்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், இரண்டாம்புளிக்காடு தி.மு.க. கிளைச் செயலாளர் திரு சி. விஜயகுமார் மற்றும் அவரது தம்பி திரு சி. ஜெயகுமார் (இருவரின் த/பெ அமரர் சு. சின்னத்தம்பி, நவக்கொல்லை கிராமம்) ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து 2001ம் ஆண்டு என்னிடம் விற்ற (இரண்டாம்புளிக்காடு சார் பதிவு அலுவலக கிரய பத்திரப் பதிவு எண் 376/2001) பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் வரும் பள்ளியோடைவயல் கிராமத்தில் உள்ள, 12 ஆண்டுகள் என்னால் அனுபவிக்கப்பட்டு வந்த, 72 சென்ட் புஞ்சை நிலத்தில் சுமார் 38% விஸ்தீரணத்தை 2013ம் ஆண்டு அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். அவர்களின் இச்செயலைத் தொடர்ந்து, என்னுடைய மனுவின் பேரில் வருவாய் துறையினர் நிலத்தை அளவை செய்து நான்கெல்லைக் கற்களை நட்டு நிலத்தின் மீதான என் உரிமையை நிலைநாட்டினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அன்று இரவே அந்த நான்கெல்லைக் கற்களைத் திருடியதுடன் பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் என் மீதும், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து 2021ம் ஆண்டு ஜூலை 22ம் நாள் மீண்டும் வருவாய் துறையினர் நிலத்தை அளவை செய்து நான்கெல்லைக் கற்களை நட்டு நிலத்தின் மீதான என் உரிமையை மீண்டும் நிலைநாட்டினர். ஆனபோதும் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அன்று இரவே நான்கெல்லைக் கற்களை மூன்றாவது முறையாக திருடிவிட்டு 100% நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதோடு என்னையும் நிலத்திற்குள் செல்ல விடாமல் மிரட்டி தடுத்து விட்டனர்.
இது தொடர்பாக நான் கிராம நிர்வாக அலுவலரிடமும் சேதுபாவாசத்திரம் காவல்துறையிடமும் புகார் மனு (23/07/2021) அளித்தும், கிராம நிர்வாக அலுவலர் திரு தங்கமுத்துவும் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு செங்கமலக்கண்ணனும் இச்சம்பவம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு மட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். பட்டுக்கோட்டை வட்டாட்சியரால், காவல்துறை பாதுகாப்புடன், நில அளவை செய்ய இரண்டு முறை அறிவுறுத்தப் பட்டும் இவ்விறு அதிகாரிகளும் அதனை அலட்சியப் படுத்தி விட்டனர்.
இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்களின் மேலதிகாரிகளான தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்), பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் புகார் அளித்தும் பலனில்லை.
ஆதலால் தாங்கள், அருள் கூர்ந்து, இப்பிரச்சினையில் தலையிட்டு குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன் என் நிலத்தை மீட்டுத் தந்து அமைதியை நிலைநாட்ட வேண்டுமாய் மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
பி. நீலகண்டன் ([protected])
நாடியம் அஞ்சல் 614802
பேராவூரணி வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்
Was this information helpful? |
Post your Comment