ஐயா,
நாங்கள் சுமார் 65 குடும்பங்கள் யமுனாத்தெரு விரிவாக்கம், 27வது வார்டு, இரும்புலியூர் கிழக்கு தாம்பரம் பகுதியில் கடந்த 5 வருட காலமாக சாலை வசதி, கழிவு நீர் வெளியேற கால்வாய் வசதி மற்றும் குடிநீர் வசதியின்றி பலவித இன்னல்களுக்கிடையே வாழ்ந்து வருகின்றோம்!
தற்போது மேலும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகிறது. குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் ஆங்காங்கே சாலைகளிலும் மற்றும் காலி மனைகளிலும் தேங்கி குளம் குட்டை போல ஆகிவிட்டது. அதில் கொசுக்கள் உற்பத்தி ஆனதால் பலவித தொற்று நோய்கள் பரவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.மேலும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இது சம்மந்தமாக நகராட்சிக்கு நேரிலும் மற்றும் பதிவு தபால் மூலமாகவும் இன்னும் பல வழிகளிலும் கடந்த இரண்டு வருடமாக முயற்சிகள் மேற்கொண்ட போதும் நடவடிக்கை ஏதுமில்லை.
மேலும் இன்று வரை நாங்கள் வீட்டு வரியினை முறையாக செலுத்தி வருவதோடு பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் சாலை மேம்பாட்டு கட்டணம் இவற்றையும் ஏற்கனவே செலுத்தி விட்டோம்.
இருப்பினும் இன்று வரை எங்களுக்கு மேற்கண்ட வசதிகள் எதுவுமே இல்லை. அதனால் வாழ்வதற்கே தகுதியில்லாத சூழல் இங்கு உருவாகியுள்ளது.
ஆகவே, இவ்விஷயத்தில் எங்கள் பகுதியின் இந்த நிலையை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து எங்கள் பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்து அதை தீர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இத்துடன் எங்கள் பகுதியின் தற்போதைய நிலையை புகைப்படங்கள் எடுத்து இத்துடன் தங்கள் மேலான பார்வைக்கு அனுப்பி உள்ளோம். நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
யமுனாத்தெரு விரிவாக்கப்பகுதி குடியிருப்பு வாசிகள்
27th ward
இரும்பூலியூர்,
கிழக்கு தாம்பரம்.
Was this information helpful? |
Post your Comment